உளூச் செய்வது

'என்னுடைய தந்தையின் உடன் பிறந்தார். (அமர் இப்னு அபீ ஹஸன்) அடிக்கடி உளூச் செய்பவராக இருந்தார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜைத் அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்ய நீர் கண்டீர் என்பதை எனக்கு அறிவிப்பீராக' எனக் கேட்டார். அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு தட்டையான பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, அதிலிருந்து தம் கையில் ஊற்றி மூன்று முறை கழுவினார். பின்னர் தம் கையை அந்தப் பத்திரத்தில் நுழைத்துத் தண்ணீர் எடுத்து மூன்று முறை ஒரே கை தண்ணீரால் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையை(ப் பாத்திரத்தில்) நுழைத்துத் தண்ணீர் கோரி மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டிரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையால் தண்ணீர் எடுத்துத் தம் தலையின் முன் பக்கமிருந்து பின் பக்கமும் பின் பக்கமிருந்து முன் பக்கம் பின் பக்கமிருந்து முன் பக்கமும் கொண்டு சென்று தலையைத் தடவினார். பின் தம் இரண்டு கால்களையும் கழுவிவிட்டு 'இப்படித்தான் நபி(ஸல்) உளூச் செய்ய பார்த்தேன்' என்று கூறினார்கள்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.