குளித்தல்

'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக தண்ணீர் வைத்தேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலக்கையால் தண்ணீரைத் தங்களின் இடக்கையில் ஊற்றி இருமுறையோ, மும்முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய்க்கொப்புளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் தலையில் தண்ணீர் ஊற்றி உடம்பைக் கழுவினார்கள். பின்னர், சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள் நான் அவர்களிடம் துவாலையை; கொடுத்தேன். அவர்கள் அதை விரும்பாமல் தங்களின் கைகளால் தண்ணீரை வழித்தார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.


குளித்தல்

'நபி(ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


குளித்தல்

'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் இரண்டு கைகளையும் கழுவுவார்கள். தொழுகைக்குரிய உளூவைச் செய்வார்கள். பின்னர் குளிக்கத் துவங்குவார்கள். தங்களின் கையால் தலை முடியைக் கோதுவார்கள். தலையின் தோல் நனைந்தது தெரிய வந்ததும் தலையின் மீது மூன்று முறை தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் உடலின் இதர பாகங்களைக் கழுவுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


குளித்தல்

'நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தலை முடிக்கிடையில் நறுமணத்தின் பளபளப்பை நான் (இன்றும்) பார்ப்பது போன்று இருக்கிறது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


குளித்தல்

'('நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்தி, காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கூறியபோது) 'நான் நபி(ஸல்) அவர்களுக்கு நறுமணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.


குளித்தல்

'நான் அதிகமாக 'மதி' எனும் காம நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி(ஸல்) அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி அவர்களிடம் கேட்டு வருவதற்கு ஒருவரை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது, 'நீ உன்னுடைய உறுப்பைக் கழுவிவிட்டு உளூச் செய்து கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அலீ(ரலி) அறிவித்தார்.


குளித்தல்

நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ்(ரலி) கூறினார்" என கதாதா அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.


குளித்தல்

("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.


குளித்தல்

நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்துத் திரையிட்டேன். நபி(ஸல்) அவர்கள் தண்ணீரைத் தங்களின் கையில் ஊற்றி ஒரு முறையோ, இரண்டு முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய்க்கும் மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும், தலையையும் கழுவினார்கள். தங்களின் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அப்போது, 'வேண்டாம்' என்பது போல் தங்களின் கையினால் சைகை செய்தார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
"இரண்டு முறை கை கழுவினார்கள் என்பதோடு மூன்றாவது முறை கழுவினார்கள் என்று மைமூனா(ரலி) கூறினார்களா இல்லையா என எனக்குத் தெரியாது" என்று இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுலைமான் கூறினார்.


குளித்தல்

'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக, நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன்கைகளில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தலையை மூன்று முறை கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.


;;