தொழுகை

'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது எங்களில் சிலர் கடுமையான வெயிலின் காரணமாக ஆடையின் ஒரு பகுதியை ஸுஜுது செய்யுமிடத்தில் வைத்துக் கொள்வோம்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கை விரிப்பில் தொழும்போது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் ஆயிஷா(ரலி) கிடப்பார்கள்" என உர்வா அறிவித்தார்.


தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் என்னுடைய படுக்கை விரிப்பில் தொழுதபோது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் நான் கிடப்பேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் (சிறு) விரிப்பின் மீது தொழுதார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'என்னுடைய பாட்டியார் முலைக்கா, நபி(ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்ட பின்னர் 'எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்' என்று கூறினார்கள். நான் புழக்கத்தினால் கறுத்திருந்த எங்களின் ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வாழும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முலைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்திவிட்டுச் சென்றார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும்போது, சில வேளை அவர்களின் ஆடை என் மீது படும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் குதிரையில் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்துவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு மூட்டுக்காலில் அல்லது புஜத்தில் முறிவு ஏறபட்டுவிட்டது. ஒரு மாத காலம் தங்களின் மனைவியரிடம் செல்வதில்லை எனச் சத்தியம் செய்தார்கள். பேரீச்ச மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பரணில் அமர்ந்தார்கள். அவர்களின் தோழர்கள் அவர்களை நோய் விசாரிப்பதற்காக வந்தபோது (அந்தப்பரணியில்) அமர்ந்தவர்களாகவே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். வந்தவர்கள் நின்று தொழுதார்கள். ஸலாம் கொடுத்த பின்னர் நபி(ஸல்) அவர்கள் 'பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் சொல்லுங்கள்; அவர் ருகூவு செய்தால் நீங்களும் செய்யுங்கள்; அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் செய்யுங்கள்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்' எனக் கூறினார்கள். நாள்கள் சென்றதும் நபி(ஸல்) அவர்கள் அந்தப் பரணிலிருந்து இறங்கினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே!' எனத் தோழர்கள் கேட்டபோது 'இந்த மாதம் இருபத்தி ஒன்பது நாள்கள் தாம்' என்று கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.


தொழுகை

ஸஹ்ல் இப்னு ஸஅதிடம் '(நபி(ஸல்) அவர்களின் பிரசங்க) மேடை எதனால் செய்யப்பட்டது?' என்று (மக்கள்) கேட்டார்கள். அவர், '(இப்போது வாழும்) மனிதர்களில் இது பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் எவருமில்லை. அது ஒரு வகைக் காட்டு மரத்தினால் செய்யப்பட்டது. இன்னாருடைய அடிமையான இன்னார்தாம் அதை நபி(ஸல்) அவர்களுக்குச் செய்து கொடுத்தார். அது செய்யப்பட்டு அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டதும் அதன் மீது நபி(ஸல்) அவர்கள் நின்று கிப்லாவை முன்னோக்கி(த் தொழுகைக்குத்) தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களெல்லாம் நின்று தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு ருகூவு செய்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் ருகூவு செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸுஜுது செய்தார்கள். பின்னர் மிம்பரின் மீது ஏறி நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள். இதுதான் அந்த மேடையின் நிலையாகும் என்றார்" என அபூ ஹாஸிம் அறிவித்தார்.
அஹ்மத் இப்னு ஹன்பல் இந்த ஹதீஸைப் பற்றிக் கூறியபோது, 'மக்கள் நிற்கும் இடத்தை விட உயரமான இடத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள் என்றே இந்த ஹதீஸின் மூலம் அறிகிறேன். எனவே ஜமாஅத்தாகத் தொழும்போது இமாம் உயரமான இடத்திலும் மக்கள் தாழ்ந்த இடத்திலும் நின்ற தொழுவது தவறில்லை என்பதைத்தான் இந்த ஹதீஸின் மூலம் அறியமுடிகிறது' என்று என்னிடம் கூறினார்" என .அலி இப்னு அப்தில்லாஹ் கூறினார்.
"இதைப்பற்றி சுஃப்யான் இப்னு உயைனா அவர்களிடம் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை அவரிடமிருந்து நீங்கள் செவியுறவில்லையா?' என்று அலி இப்னு அப்தில்லாஹ், அஹ்மது இப்னு ஹன்பலிடம் கேட்டதற்கு அவர் 'இல்லை' என்று பதிலளித்தார்.


தொழுகை

தோலினால் செய்யப்பட்ட சிவப்பு நிற மேலங்கியை நபி(ஸல்) அவர்கள் அணிந்திருக்கப் பார்த்தேன். மேலும் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரை பிலால்(ரலி) எடுத்துச் செல்வதையும் அந்தத் தண்ணீரை எடுப்பதில் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்வதையும் கண்டேன். அந்தத் தண்ணீரைப் பெற்றவர் அதைத் தங்களின் உடம்பில் தடவினார். அந்தத் தண்ணீர் பெறாதவர் தண்ணீரைப் பெற்ற தம் நண்பரின் கையில் உள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க் கொண்டார்.
பிலால்(ரலி) ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார். நபி(ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாம் அந்தத் தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத் ஜமாஅத்தாகத் தொழுதார்கள். அந்தக் கம்பிற்கு அப்பால் மனிதர்களும் ஆடு மாடுகளும் குறுக்கே செல்வதைப் பார்த்தேன்" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.


;;