உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் (உளூவில்) தங்களுடைய தலைப்பாகையின் மீதும் இரண்டு காலுறைகளின் மீதும் மஸஹ் செய்ததை பார்த்தேன்" என அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அவர்களை பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். (அதில்) நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு இரண்டு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்" என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை உளூச் செய்தபோது) இரண்டு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்" என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார். அப்துல்லாஹ் இப்னு உமர் (தம் தந்தை) உமர்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது 'ஆம்! நபி(ஸல்) அவர்களைப் பற்றிய ஒரு செய்தியை ஸஃது உனக்கு அறிவித்தால் அது பற்றி வேறு யாரிடமும் கேட்காதே' என்று உமர்(ரலி) கூறினார்" என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் நான்கு 'முத்து'விலிருந்து ஐந்து 'முத்து' வரை உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு 'முத்து' அளவு தண்ணீரில் உளூச் செய்வார்கள்" அனஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறிபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்" அனஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'என்னுடைய தந்தையின் உடன் பிறந்தார். (அமர் இப்னு அபீ ஹஸன்) அடிக்கடி உளூச் செய்பவராக இருந்தார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜைத் அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்ய நீர் கண்டீர் என்பதை எனக்கு அறிவிப்பீராக' எனக் கேட்டார். அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு தட்டையான பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, அதிலிருந்து தம் கையில் ஊற்றி மூன்று முறை கழுவினார். பின்னர் தம் கையை அந்தப் பத்திரத்தில் நுழைத்துத் தண்ணீர் எடுத்து மூன்று முறை ஒரே கை தண்ணீரால் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையை(ப் பாத்திரத்தில்) நுழைத்துத் தண்ணீர் கோரி மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டிரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையால் தண்ணீர் எடுத்துத் தம் தலையின் முன் பக்கமிருந்து பின் பக்கமும் பின் பக்கமிருந்து முன் பக்கம் பின் பக்கமிருந்து முன் பக்கமும் கொண்டு சென்று தலையைத் தடவினார். பின் தம் இரண்டு கால்களையும் கழுவிவிட்டு 'இப்படித்தான் நபி(ஸல்) உளூச் செய்ய பார்த்தேன்' என்று கூறினார்கள்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.


உளூச் செய்வது

நபி(ஸல்) அவர்களுக்கு நோய் அதிகமாம் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தங்கள் இதர மனைவிகளிடம் அவர்கள் அனுமதி கேட்டதற்கு அவர்களும் அனுமதி வழங்கினார்கள். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்குமிடையில் (தொங்கியவர்களாக) வெளியில் வந்தார்கள். (அவர்களின் கால்களைச் சரியாக ஊன்ற முடியாததால்) பூமியில் அவர்களின் இரண்டு கால்களும் கோடிட்டுக் கொண்டே சென்றன.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்குள் சென்று அவர்களின் வேதனை அதிகரித்தபோது 'வாய் திறக்கப்படாத ஏழு தோல்பை தண்ணீரை என் மீது ஊற்றுங்கள். நான் மக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவரான ஹப்ஸா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஒரு கல் தொட்டியில் நபி(ஸல்) அவர்களை அமர வைத்து, அவர்கள் 'போதும்' என்று சொல்லும் வரை அவர்களின் மீது தண்ணீரை ஊற்றினோம். பின்னர் மக்களுக்கு உபதேசம் செய்வதற்காக வெளியில் வந்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இது பற்றி அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களைத் தாங்கிச் சென்ற இருவரில்) இரண்டாமவர் யார் என்பது உமக்குத் தெரியுமா? என்று இப்னு அப்பாஸ்(ரலி) கேட்டார். நான் 'தெரியாது' என்றேன். 'அவர் தாம் அலீ(ரலி)' எனக் கூறினார்" என (இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் கூறுகிறார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்தபோது செம்பினாலான ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தோம். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். தங்களின் முகத்தையும் மூன்று முறையும் கைகளை இரண்டு முறையும் கழுவினார்கள். மேலும் தங்களின் தலையைத் தடவினார்கள். (தங்கள் கைகளைத் தலையில் வைத்து) முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்துவிட்டு, திரும்ப முன் பக்கம் கொண்டு சென்றார்கள். மேலும் தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) கூறினார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

தொழுகையின் நேரம் வந்தபோது சமீபத்தில் வீடு உள்ளவர்கள் (உளூச் செய்வதற்காக) தங்களின் வீடுகளுக்குச் சென்றனர். மற்றவர்கள் தங்கிவிட்டனர். அப்போது, நபி(ஸல்) அவர்களிடம் தண்ணீர் நிரம்பிய ஒரு கல் தொட்டி கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அதில் தங்களின் கையை விரித்துக் கழுவ முடியாத அளவிற்கு (அதன் வாய்) சிறியதாக இருந்தது. எஞ்சியிருந்த அனைவரும் அதில் உளூச் செய்தார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
"அனஸ்(ரலி) அவர்களிடம் 'நீங்கள் எத்தனை பேர்கள் இருந்தீர்கள்' என்று நாம் கேட்டதற்கு 'எண்பதுக்கும் அதிகமானவர்கள் இருந்தோம்' எனக் கூறினார்" என ஹுமைத் அறிவித்தார்.


;;