நபிமொழி 37

குதைப் பின் அல்ஹரித் ரளியல்லாஹு அன்ஹு வர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன். (குளிப்புக் கடமையான) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எப்போது குளிப்பார்கள்? இரவின் ஆரம்பத்திலா அல்லது இறுதியிலா?

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் குளிப்பார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். மீண்டும் நான் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ருத் தொழுகையை இரவின் ஆரம்பத்தில் தொழுதார்களா? அல்லது இறுதியில் தொழுதார்களா?

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் தொழுவார்கள். அதற்கு நான் அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன்.

மீண்டும் நான் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்களா? அல்லது சப்தமின்றி ஓதுவார்களா? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள். சிலவேளை அவர்கள் சப்தத்துடனும் சிலவேளை சப்தமின்றியும் ஓதுவார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். (நூல்: அபூதாவூது)